Thursday, January 22, 2015

ஒற்றைக்கால் தவம் கடலூர் சீனு

இனிய ஜெயம்,

இப்போது யோசித்துப் பார்த்தால், மயில் கழுத்து சிறுகதையும், தாயார் பாதம்  சிறுகதையும்  எதோ ஒரு புள்ளியில் பிரிக்க இயலாதபடி பின்னிப் பிணைந்திருப்பதாகப் படுகிறது.  தாயார் பாதம்  சிறுகதையில்  பிறிதொரு சமயம் ராமனும்,பாலுவும் கழுகுமலை செல்லப்போவதற்கான லீட் வந்துவிடுகிறது. அனைத்துக்கும் மேல்   மயில் கழுத்து   கதையில்  ராமன் எழுத்து மற்றும் சங்கீதத்தை ஒப்பிட்டு சங்கீதத்துக்கு கொடுக்கும் இடம்.இலக்கியத்தில் உள்ளது போல தீமையும் குப்பையும் இல்லாத  அதி தூயது சங்கீதம் என்றே சொல்கிறார்.   அவரது இலக்கும் கூட தீமையே இல்லாத ஒரு புனைவு எழுதுவதாத்தான் இருக்கிறது.

இந்தப் புள்ளியில் நின்று  தயார் பாதம்  சேஷய்யரை நோக்கினால். அவரது சங்கீத சாகரம்  என்ற ஆளுமைக்குள்  புதைந்து கிடக்கும் 'ஆலகாலம்' துணுக்குற வைக்கிறது. ராமன் வள்ளிக்கு நீல வண்ண பட்டு எடுத்து சாற்ற விழைகிறார். அது ஒரு சமர்ப்பணம், ஈடேற்றம் அல்லவா? சேஷையர் சரஸ்வதிக்கு குடம் குடமாக தேனாபிஷேகம் செய்கிறார். ஆனால் அது அவருக்குள் உறைந்த கசப்பை  எதுவுமே செய்ய வில்லை.

ராமன் ஒற்றைக் கால் தவம்  என்ற பதத்தை கேள்விப்பட்டதுமே உத்வேகம் கொண்டு விடுகிறார். பாலுவின் 'சைன்டிபிக்' விளக்கம் எதுவும் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அந்தப் பதம்  ராமனின் பாட்டி குறித்து, சேஷையாரின் லவ்கீகங்களை கவனித்துக் கொள்ளும் சீடர் சொல்லும் ''விடு எல்லோரும் இரண்டு கால்ல நிக்கறா .சிலர் ஒரு காலை தூக்கிடரா அவ்வளவுதான் ஒண்ணும் பண்ணறதுக்கு இல்ல''. எனும் சொல் வரை கொண்டு வந்து விடுகிறது.

ராமன் கேட்பது சரியான கேள்விதான். கல்யாணம்தான் நடந்துகிட்டே இருக்கே. பிறகு ஏன் ஒற்றைக் கால் தவம்?  சேஷையர் அப்பா முன்  அவரது வருங்கால மருமகள் மூட்டை முடுசிச்சுடன் வந்து நிற்கையில் இதற்க்கான விடை கிடைக்கிறது.  எல்லா பெண்களும் தவம் இருக்கிறார்களா என்ன? ராமனின் பாட்டி ஒரு கலைஞ்ஜி பாடகி. அவள் 'என்னவாக இருக்கிறாளோ' அதை மலரவைக்கும் எதிர்காலம் அவளுக்கு தேவை. அந்த ஆவல் கொண்ட பெண் யாரும் அகத்தில் ஒற்றைக் கால் தவத்துடன்தான் இருப்பார்.

அவளது தவத்துக்கு வரமாக கிடைத்தவர்தான் அவளது மாமனார். அவளது நிலையில் நின்று பார்த்தால் அவளது மாமனாரும் சேஷய்யரும் அவளுக்கு எத்தகையதொரு நம்பிக்கை?

ஆனால் புக்ககத்தில் அவளுக்கு நிகழ்ந்தது , ஓவியனின் விழிகளை சிற்பியின் விரல்களை பறித்ததுபோல எத்தகையதொரு அநீதி? அவளுக்கு எங்கே பிழை நிகழ்ந்தது? சக கலைஞ்சன் சேஷையரால் நிகழ்ந்ததே அது.  சேஷய்யர் அவரது குருவால் வளர்க்கப்பட்டவர். ஆனால் அவரது குருவோ தெருவில் இருந்து சாட்சாத் சரஸ்வதியே  மருமகளாக அழைத்து வருகிறார்.  எந்தக் கலைஞ்சனுக்கும் தன்னை மிஞ்சிய கலைஞ்சனை உடனே அடையாளம் தெரிந்து விடும். இங்கே சேஷய்யருக்கு அது அவரது மனைவி உருவில். அங்கு அவர் மனதில் விழுந்த விஷ வித்து , அவர் மனைவி தலையில் மலக்கரைசலை கவிழ்ப்பதில் விருட்சமென விஸ்வரூபம் கொள்கிறது. ஆம் அவரால் சரஸ்வதிக்கு குடம் குடமாக தேனாபிஷேகம் செய்ய முடியும். சட்சாத் சரஸ்வதியே எதிரில் நின்றால் அவளது தலையில் மலக் கரைசலைதான் அவரால் ஊற்ற முடியும்.

இந்தத் தாயாரின் பூமியில் பதிந்த பாதம்  அவளுக்கு சேஷய்யர் தரும் மனநோய் வாழ்வு. பூமி தொடாத பாதம்  அவளது கலைஞ்ஜி  எனும் கனவு.

கமல் மேடையில்  ''இந்தாளு எழுதுன கொற்றவைய படிச்சதும். ஒண்ணு எழுதி இந்த ஆள மிஞ்சனும். இல்லன்னா அடிச்சு கொன்னுடனும்னு தோனுச்சு''என்றார். ஷேஷய்யரும் கலைஞ்சர்தான் .அவர் இரண்டாவதை செய்தார்.

இனிய ஜெயம் ஒரு கலை ஆளுமை  ஒன்றின் சரிவை, வீழ்ச்சியை, சுத்தத்தின் பின் உறையும் சாக்கடையை  இத்தனை உக்கிரமாக முன்வைத்த கதை தமிழில் பிறிதொன்றில்லை.

கடலூர் சீனு

No comments:

Post a Comment