Friday, November 28, 2014

தாயார் பாதமும் அறமும்

 அன்புள்ள ஜெயமோகன் சார்,

       சமீபத்தில் தங்கள் அறம் சிறுகதை தொகுப்பு வாசித்தேன். எல்லா கதைகளும் மனதை நெகிழச்செய்தன.அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் படித்தேன். அதில் பலமுறை வாசித்த கதை தாயார் பாதம். அந்த தொகுப்பிலேயே என்னை  மிகவும் ஈர்த்த கதை அதுதான் என நினைக்கிறேன்.  It was not a straightforward story, but how can it be anything else? ராமனின் கதாபாத்திரம் அவ்வளவு gentle, hesitant, அவன் சுமந்த வடுக்கள் அவ்வளவு ஆழமாக பதிந்தவை, வேறெப்படி இருக்க முடியும்? இக்கதையை பற்றி ஒரு அடிப்படையான சந்தேகம் உள்ளது. அதை முடிந்தவரை சுருக்கமாக  கேட்கிரேன்.

       சீதையின் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். குமரி அம்மன் தாணுமாலயானை கல்யாணம் செய்ய பாதத்தை தூக்கினாள் என்றால் சீதை ராமனுடனே சேர்ந்து இருக்க பாதத்தை தூக்கினாள் . ராவணனை எதிர்த்து பாதம் தூக்கினாள். ராமன் இல்லாமல் இரு குழந்தைகளை ஒற்றை காலில் நின்று வளர்த்தாள். அப்போதும் சந்தேகம் வந்த போது தான் காலை கீழே வைத்தாள், அப்படியே பூமியினுள்ளே சென்றாள். இதில் அபாரமானது அவள் காலை தூக்கியது அல்ல, அவள் எல்லாச்செயல்களும் எப்போதுமே அன்பால் மட்டுமே தூண்டப்பட்டவையாக இருந்தன.

       கொஞ்ச நாள் முன்பு ஒழிமுறி திரைப்படம் பார்தேன். அதில் வரும் மீனாக்ஷி அம்மாள் இதே வார்த்தையை சொல்கிறாள் - அவள் விவாகரத்து கோருவது, காழ்ப்பினால், வன்மையால் அல்ல. அன்பினால் மட்டுமே. அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பழிக்கு பழி வாங்கவில்லை.  இது எப்படி முடியும் என்று தர்க்கரீதியாக எளிதில் புரியக்கூடிய ஒன்றாக எனக்கு தெரியவில்லை. அன்பின் வழி மட்டுமே புரிகிறது.சத்தியமாக இது கோழைத்தனமில்லை, in fact quite the opposite. இந்த குணத்திற்கு ஒரு பெயர் கூட புலப்படவில்லை எனக்கு. அப்படி ஒரு ineffable quality. இது அபாரமான ஒன்று. சந்தேகமே இல்லை.

       தாயார் பாதம் சரஸ்வதி பாட்டியும் (நான் அப்படி கூப்பிட்டு பழகிவிட்டேன் :)) இதே ரகம் தானே? சீதையின் புருஷன் முதலில் அரசன், that was his baggage. மீனாக்ஷி அம்மாளின் புருஷனுக்கு அவன் அம்மாவிடம் இருந்த பயம், அப்பாவின் கஷ்டம் பார்த்தது அவரது baggage. அவர்கள் மனைவிகளுக்கு இழைத்த அநீதிகளுக்கு மூல காரணம் இருந்தது (அவை excuses அல்ல என்பது என் கருத்து). ஆனால் சரஸ்வதி பாட்டியின் புருஷன் seems to have been simply indifferent. அவரை கூப்பிட்டு, "தாத்தா, பாட்டிக்கு தான் ஒரு பாட்டு பாடி நீங்க கேக்கணும்னு ஆசை" என்று சொல்லியிருந்தால் பேந்த பேந்த முழித்திருப்பார். அவர் பாட்டியின் அகத்தை  conceptualize பண்ணக்கூடியவரே அல்லர் என்று தோன்றுகிரது. சரியான 'அந்த காலத்து மனுஷர்'. அவள் மேல் மலம் கொட்ட வேண்டியதே இல்லை, அவ்வளவு வருடங்களாக வேரென்ன செய்தார்? அவளை தன மனைவியாக என்ன,  ஒரு மனுஷியாக கூட பொருட்படுத்தியதாக தெரியவில்லை. என்ன கொடுமை அது.

       அந்த காலத்தில், அந்த இடத்தில், விவாகரத்து என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அனால், மீனாக்ஷி அம்மாள் காலத்தில் (100 வருடங்கள் கழித்து?) அவள் தன் அகம் கருதி, தாணுபிள்ளையினிடம் கொண்ட தன் உறவின் நேர்மையை (integrity) கருதி  அவள் விவாகரத்து கேட்கிறாள். இந்த காலத்தில், என் தலைமுறையில், சில உறவுகள் தொடராமல் இருக்க இதுவே ஒரு முக்கிய காரணம். "என் சுயத்தை வளரவிடாதவனிடம் (வளிடம்) நான் இருந்தால் நான் எப்படி முழுமை அடைவேன்?" என்ற எண்ணம். மீனாக்ஷி அம்மாளின் முடிவை என் மனம் whistle அடித்து ஆமோதித்து, அவளில் துளிக்கூட காழ்ப்பிள்ளதது அவளை வாரி அணைக்க வேண்டும் போல இருந்தது. What a woman. ஆனால் ஒரு வேளை அவள் விவாகரத்து கோரவில்லை என்றால் காழ்ப்பில்லாமல் இருந்திருப்பாளா? அன்பெனும் வடிவாக இருந்திருப்பாளா? தெரியவில்லை.

       பாட்டி மிகுந்த மன வேதனையில் இறந்தாள். ஒரு OCD patient மாதிரி உணவைக்கூட மறந்து, கழுவு, கழுவு என்று அவள் சுயத்தின் மேல் படிந்த அழுக்கை கழுவுகிராளே! (Lady Macbeth comes to mind, ஆனால் அவளோ செய்த தவறை கழுவ முயற்சித்தாள். பாட்டி செய்யாத தவறுக்காக இழைக்கப்பட்ட மானபங்கத்தை விலக்க முயற்சிக்கிறாள்). பாட்டிக்கு முடிந்திருந்தால் விவாகரத்து வாங்கியிருப்பளா? தெரியவில்லை.

       என் கேள்வி என்னவென்றால், பாட்டியின் இந்த பொறுமை, இந்த தவம், இந்த ஒற்றை கால் தூக்கி நிற்கும் ineffable stance, இது அறம் ஆகுமா? அறம் என்பது என்றென்றும் நிலைத்து நிற்க்கும் ஒரு விழுமியம் என்று நான் புரிந்து கொள்கிரேன். சீதையோ மீனாக்ஷி அம்மளோ அன்பு, பொறுமை, வலிமை  நிறைந்தவர்கள். அந்த அன்பு நிறைந்த பொறுமையும் வலிமையையும்  பாட்டியிடமும் இருந்தது (அவள் சிறு வயதில் என்ன ஒரு equanimityயோடு பிறந்த ஊரை விட்டு வருகிராள்!). ஆனால் அந்த அன்பை கடைசி வரை அவள் தக்க வைத்து கொள்கிறாளா? அவள் புத்தி பேதலித்து சுயம் இழந்து அல்லவா சாகிறாள்? சீதை மற்றும் மீனாக்ஷி அம்மள் அகத்தை  பாதுகாத்து அன்பை காக்கிறார்கள். பாட்டியின் stance அவள் காலத்துக்கு வேண்டுமென்றால் சரியாக வந்திருக்கலாம், அது அறம் ஆகுமா? இதை பெண்ணியம் சார்ந்து நான் கேட்கவில்லை. ஒரு மனிதனின் சுயத்தை இன்னொரு மனிதன் மதிக்காத போது அதற்க்கு இது போன்ற பொறுமை, as a principle, பதில் ஆகுமா என்பதாக என் கேள்வியை எடுத்துக்கொள்ளலாம்.

       எனக்கு கதையில் அறம் என்று பட்டது  தாத்தாவின் இசையை ராமன் தன்னுணர்வற்ற நிராகரிப்பு செய்தது. என்ன ஒரு பண்பான மனிதன். எவ்வளவு sensitive. பாட்டி எதுவுமே சொல்லாமலேயே, அவள்  உள்ளுணர்வை, அகத்தை  புரிந்து கொண்டவன் அவன் தானே? வார்தைகளால் அல்ல, வார்த்தை மீறிய சங்கீதத்தில் அவன் தாத்தாவுக்கு  பதில் சொல்கிறான் - 'நீ வேண்டாம்! என் பாட்டியை உதாசீன படுத்திய உன் சங்கீதம் வேண்டாம்! என் விரலில் கூட ஞானம் இருக்கு, ஆனால் என் குரல் உன்னை நிராகரிக்கிறது.' ஒரு மனுஷியின்  இழிவுக்கு ராமனின் உடலில்  ஒவ்வுறு அணுவும்  கண்டனம் தெரிவிக்கின்றது போல் தோன்றுகிரது. அதுவே அறமாக எனக்கு பட்டது. ஆனால் அதில் ஒரு வித குரூரம் கூட இருக்கு, அது மட்டுமே என்னை சற்று சிந்திக்க வைக்கிறது.

       நேரம் கிடைக்கும்போது  தெளிவாக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
சுசித்ரா


அன்புள்ள சுசித்ரா

அறம் தொகுதியில் உள்ள கதைகளின் மையம் அறம் என்றால் இது என சுட்டிக்காட்டுவது அல்ல. அறம் சார்ந்த ஓர் அக எழுச்சியில் இருந்து அக்கதைகள் அனைத்தும் தொடங்குகின்றன, அவ்வளவுதான்.

பலசமயம் அறத்தின் முகங்களை சுட்டிக்காட்டுகின்றன. சிலசமயம் அறம் திகைத்து நிற்கும் இடங்களை. அறம் என்றால் என்ன என்றல்ல அறம் எப்படி வாழ்வில் செயல்படுகிறது என்றே அக்கதைகள் வினவிக்கொள்கின்றன.

அக்கதைகளை நானும் ஒரு வாசகனாகவே இப்போது வாசிக்கமுடியும். என் எல்லா படைப்புகளையும்போலவே அவையும் தெளிவாக யோசித்து வகுத்து எழுதப்பட்ட கதைகள் அல்ல. எழுதுவதன் மூலம் சென்றடைந்த சில தருணங்கள், அவ்வளவுதான்

தாயார்பாதம் கதையை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். நீண்ட நெடுங்காலமாக நம் மரபில் வன்முறையற்ற ஓர் எதிர்ப்புமுறை உள்ளது. எதிர்க்கப்படுவதன் முன் உறுதியாக தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி அதற்கான அனைத்து துயர்களையும் மௌனமாக ஏற்றுக்கொள்வது அது.

வல்லமை வாய்ந்த ஒருவனை எந்த ஆற்றலும் இல்லாத ஒருவன் எதிர்க்கும் வழி அது. அரசாங்கத்தை, சமூகத்தை, மதத்தை எளிய தனிமனிதன் எதிர்க்கும் வழி. அவனிடம் உள்ள இறுதி ஆயுதம் அவன் உடல், உயிர்

அது சமண முனிவர்களின் வழிமுறையாக இருந்தது. பிழை செய்தவனின் கண்முன் உண்ணாவிரதமிருந்து உயிர்விட்டார்கள் அவர்கள். அதை தோல்வி என்றோ வீழ்ச்சி என்றோ சொல்லமுடியுமா என்ன? அதில் வன்முறை இல்லை, வன்மம் கூட இல்லை. ஓர் உறுதிதான் உள்ளது.

இது பிழை இதை ஏற்பதை விட நான் இறப்பேன் என்பது ஒரு பெரிய அறிவிப்பு. ஒருவன் தன் இறப்பால் அதன் கீழெ அடிக்கோடிடுவான் என்றால் அது மிகப்பெரிய ஆயுதம்

அதில் இருந்தே காந்தி சத்யாக்ரகம் என்னும் போராடத்தை கண்டுகொண்டார். நவீன உலகுக்கு அதை அளித்தார். வன்முறையற்ற போராட்டம். வன்முறையை வெல்லும் கருவி

பாட்டி செய்தது அதுவே. மீனாட்சி அம்மாளுக்கோ இன்றைய பெண்களுக்கோ இருக்கும் வாய்ப்பு அவளுக்கு இல்லை. அவள் சிறையுண்டவள் , கட்டுண்டவள். ஆகவே அவளுக்கிருந்தது தன்னை முழுமையாக ஒடுக்கிக்கொள்வது. அவள் பாடவேயில்லை. தன்னை வெறுமொரு உடலாக ஆக்கிக் கொண்டாள். அந்த உடல் ஓர் அறிவிப்பாக அந்த வீட்டில் உயிருடன் இருந்துகொண்டே இருந்தது.

அதன் உச்சமே அவள் மனப்பிறழ்வு. அவள் அடையும் முடிவு. அந்தக்கதை அந்தத் தரப்பை மட்டும் வலுவாகச் சொல்லிச் செல்லும்போது அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்ட அந்த தாத்தாவின் தரப்பை ஊகத்துக்கே விட்டுவிடுகிறது. தன் இல்லத்தில் இப்படி ஒரு மூர்க்கமான எதிர்ப்பை சந்தித்தபடி அவர் வாழ்ந்திருக்கிறார்.  ஒன்றுமே செய்யமுடியாத வைரம் போன்ற அமைதியை.

அவர் எச்சிலை எடுத்துக் கொட்டினார். அவள் எஞ்சிய வாழ்நாளெல்லாம் மௌனத்தை திரும்ப அவர்மேல் கொட்டிக்கொண்டே இருந்தாள்.ஓர் உக்கிரமான சாபவாக்கியம் போல அவள் அவர் முன் தன்னை வைத்துக்கொண்டாள்.

மீனாட்சியம்மாளிடம் இருந்தது கருணை. அவளிடம் சினம் இல்லை. அதே கருணைதான் பாட்டியிடமும். ஆனால் ஆழ்மான ஒரு சினம் இருந்தது அவளுக்குள். அவள் ஒரு பாதத்தையே தூக்க முடியும். ஏனென்றால் அவள் அன்னை.


அவள் இறந்தபின்னரும் தலைமுறை தலைமுறையாக நீடிக்கிறது அவளுடைய எதிர்தாக்குதல். ராமனின் காலம் வரை. அவருக்குப்பின்னரும் கூட. அவர் இறந்தபின்னும் அந்தக் கடனை அடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். மிகப்பெரிய தண்டனை. நின்று கொல்லும் அறத்தின் வடிவம்தான் அவள்


அத்தகைய பல கதைகள் நம் மரபில் சென்றகாலத்தில் உள்ளன. பெரும்பாலான நாட்டுப்புறப் பெண்தெய்வங்கள் அத்தகையவைதான். நம் குடும்பங்களில் எல்லாம் அத்தகைய கதைகள் உண்டு.

பிரபஞ்சன் ஒரு கதை சொன்னார். அவரது குடும்பத்தில் கள்ளுக்கடைகள் நடத்திவந்த ஒரு பாட்டார் தன் நான்காவது இளம் மனைவியை திரண்டி வால் சவுக்கால் அடித்தார். உடம்பெல்லாம் குருதியுடன் கிடந்த அந்த சிறுமி பழிவாங்கினாள். எஞ்சிய வாழ்நாள் முழுக்க அவள் ஒரு சொல்லும் பேசவில்லை.

ஜெ


<a href="http://aramstories.blogspot.in/">அறம் அனைத்து விவாதங்களும் </a>

Thursday, November 27, 2014

அறம் தீண்டும் கரங்கள்


ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

கடந்த கும்பமேளாவிற்கு கிளம்பும் முன் என்னிடம் இருந்த புத்தகங்கள் அனைத்தையும் மூன்று டிராவல் பேக்குகளில் அடைத்து எனது நெருங்கிய நண்பனுக்கு அவன் வீட்டில் சென்று அளித்துவிட்டு கிளம்பினேன். தனியாக கிளம்பினேன் எந்த முன் பயண திட்டமும் இல்லாமல். இரண்டு மாத திட்டம் திரும்பிவர மூன்று மாதங்களானது. நண்பன் அதிகம் வாசிப்பு பழக்கம் இல்லாதவன். தங்கள் தளத்தைப் பற்றியும் எழுத்துக்களைப் பற்றியும் அதிகம் பேசுவேன். நான் அளித்த புத்தகங்களில்  உங்களின் புத்தகங்கள் நாவல்கள் அனைத்தும் இருந்தது. அவன் வீட்டில் அலமாறியில் அடைத்து ஆங்காங்கே வைத்து இடம் மாற்றிக் கொண்டிருந்தார்களே தவிர ஏதும் எடுத்து படிக்கவில்லை என்று தெரிந்தது. வீட்டை சீரமைப்பு செய்து அதை ஓரிடத்தில் அடுக்கி வைத்து கண்ணில் தெரியுமாறு செய்தபின் அவர்களாகவே எடுத்து வாசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அறம் தொகுப்பு படித்து ஓர் நாள் அவன் வந்து புலம்பியது நன்றாகவே நினைவிருக்கிறது. அவனது மனைவிக்கு சோற்றுக்கணக்கு, நூறு நாற்காலிகள் மிகவும் பிடித்திருந்து சொன்னதாக சொன்னான். அவனுக்கு மயில் கழுத்து தவிர அனைத்தையும் பற்றி கூறினான்.



அவனது மகன் 9வது மெட்ரிகுலேசன் படிக்கிறான். அவன் அவ்வப்போது சில புத்தகங்களை விரித்து வைத்து அமர்ந்திருப்பதை அவ்வளவாக இவர்கள் கண்டுகொண்டதில்லை. அவனது பள்ளியில் புத்தக வாசிப்பிற்கு சமீபத்தில் தேர்வு நடத்தியிருக்கிறார்கள். மாணவர்கள் படித்த பிடித்தமான புத்தகத்தைப் பற்றி சொல்ல வேண்டும். ஏதாவது ஒன்றைப் பற்றி. பெரும்பாலோனோர் அவனது வகுப்பில் அனைவரும் ஆங்கில கதைபுத்தகத்திலிருந்து தான் படித்ததை சொன்னதாக கூறினான். இவனது மகன் அறம் தொகுப்பிலிருந்த “சோற்றுக்கணக்கு” கதையை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் அது தனக்கு எப்படி இருந்தது என்று விமர்சனமாகவும் எழுதிக் கொண்டிருந்தானாம். அதை என் நண்பன் படம்பிடித்து எனக்கு வாட்ஸப்பில் பகிர்ந்து மகிழ்ந்தான். ( அதை இத்துடன் இணைத்துள்ளேன் உங்கள் பார்வைக்கு )

அவனது மகன் எழுதியதை படிக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அறம் சென்று சேரும் கரங்களை உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களின் வழியே பார்த்து வியந்திருக்கிறேன். இங்கே ஒரு இளம் கரங்களில் சென்று அவனது மனதையும் நெகிழச் செய்யும் என்று எதிர்பார்த்ததில்லை. அற்புதமான ஆக்கம் அளித்தமைக்கு நன்றி.

புத்தகங்கள் என்றும் வீணாவதில்லை.

பிரேம்குமார்
மதுரை